நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வீதம் 8-9 சதவீதத்துக்குள் நிலையாக கொண்டு செல்ல முடியாவிட்டால் 2028ஆம் ஆண்டு கடனை மீள செலுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“2028ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாம் சர்வதேச நாணய நிதியத்தில் பெற்றுக் கொண்ட கடனை செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
எமக்கு கிடைக்கும் வருமானம் மட்டும் போதாது. ஏனென்றால் கிடைக்கும் வருமானத்தை பில்லியன் டொலர்களில் செலுத்த வேண்டும். ஒரு வருடத்திற்கு 10 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது.
ஆதலால் எமது வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கப்பட வேண்டும். கையிருப்பு 14-15 பில்லியன் டொலரை பேண வேண்டும். அதில் ஐம்பது வீதமே கடனை செலுத்ததுவதற்கு பயன்படுத்த முடியும்.
மிகுதி இறக்குமதிக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போது எமது பொருளாதார வளர்ச்சி 3 வீதமே காணப்படுகிறது. அதனால் அதை அதிகரித்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.