சிறுவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்து, கூரியர் (Courier) சேவைகள் மூலம் விநியோகிக்கும் புதிய கடத்தல் முறையையடுத்து பொலிஸார் நாடளாவிய ரீதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
சாதாரண பாதுகாப்பு சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சந்தேகத்திற்கு இடமில்லாத சிறுவர்களின் பொம்மைகளுக்குள் போதைப்பொருட்கள் மிக லாவகமாக மறைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
கல்முனை, மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் இயங்கி வந்த ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் விநியோக வலையமைப்பு தொடர்பாக அம்பாறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் இந்தத் தந்திரம் அம்பலமானது.
கல்முனை கடற்கரைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 107 கிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவை சிறுவர்களின் பொம்மைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கருதப்படும் 39,620 ரூபாய் பணம், மின்னணு தராசு மற்றும் இரண்டு கைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சோதனையானது அம்பாறை பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவின் உப-பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர நிலதாரி தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.