பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுவதாகவும், தொழிலாளர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
கடந்த ஜனவரி 30ஆம் திகதி அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி அடிப்படைச் சம்பளம் ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகையாக ரூ. 200 வழங்கப்படவுள்ளது.
மொத்த அதிகரிப்பான 400 ரூபாயில், 200 ரூபாயை நிறுவனங்களும் மீதி 200 ரூபாயை அரசாங்கமும் நிதி உதவியாக வழங்கும். “முதலில் 2,138 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குவோம் என்று அரசாங்கம் உறுதியளித்தது.
அப்போது பணவீக்கம் 1.5% ஆக இருந்தது. தற்போது பணவீக்கம் 5% வரை உயர்ந்துள்ள நிலையில், 1,750 ரூபாயை மட்டும் வழங்குவது தொழிலாளர்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
“20 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் எந்தவொரு நிறுவனமும் தொடர்ந்து இயங்காது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தர்ம ஸ்தாபனங்கள் அல்ல. நஷ்டம் எனக் கூறி மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் ஏன் இந்த நிறுவனங்களுக்கு மானியமாக வழங்குகிறது?” என அவர் சாடினார்.
இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ சமர்ப்பிக்கப்படவில்லை. “என்னிடம் ஒப்பந்தத்தின் பிரதி உள்ளது.
நான் சொல்வது தவறென்றால் உண்மையான ஆவணத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும்” என அவர் சவால் விடுத்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சட்டப்படி செல்லுபடியாகாது என அதில் ஒரு சரத்து இருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை உடனடியாகத் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி (Gazette) மூலம் அறிவித்து சட்டபூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சம்பள உயர்வைக் காட்டி சில தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் அளவு 20 கிலோவிலிருந்து 26 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது உண்மையான சம்பள உயர்வு அல்ல என அவர் குறிப்பிட்டார்.