பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் 2026–27 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பட்ஜெட்டில் வரிவிதிப்பு உயர்வுகள், 15,000 பொதுத்துறை பணியிடக் குறைப்புகள், மற்றும் 13 பில்லியன் டொலர் பற்றாக்குறை கணிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியா அரசின் 2026 பட்ஜெட்டில் பல்வேறு வரி உயர்வுகள், மூலதனத் திட்டங்களில் தாமதங்கள், மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் 15,000 பொதுத்துறை வேலைவாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்திற்கும் குறிப்பிடத்தக்க நிதிப் பற்றாக்குறைகள் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்ஜெட் எங்களின் முந்தைய பட்ஜெட்டுகளிலிருந்து மாறுபட்டதாகும் என்று நிதி அமைச்சர் பிரெண்டா பெய்லி (Brenda Bailey) நேற்று செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார்.
அவரது உரையில், அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்புகள் (tariffs) மற்றும் வீட்டு சந்தையின் மந்தநிலை போன்ற சவால்களே மாகாணத்தின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.
அடுத்த இரு ஆண்டுகளுக்கான பற்றாக்குறைகள் முறையே 12.1 பில்லியன் டொலர் மற்றும் 11.4 பில்லியன் டாலராக இருக்கும் என அரசு கணித்துள்ளது. இதனுடன், மாகாணத்தின் மொத்தக் கடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 154 பில்லியன் டொலரிலிருந்து 235 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஆழமான செலவுக் குறைப்புகளுடன் கூடிய சிக்கனப் பட்ஜெட்டை (austerity budget) நாங்கள் விரும்புகிறோம் என்று கூறுபவர்கள் உள்ளனர்,” எனக் கூறிய பேலி, மாகாணத்தின் நிகரப் பொறுப்புகளை (net liability) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) சதவீதமாக கணக்கிட்டு, கனடாவின் பிற மாகாணங்களுடன் ஒப்பிட்டு கடன் உயர்வை நியாயப்படுத்தினார்.
அரசு அறிவித்துள்ள வரி உயர்வுகள் பெரும்பாலும் உயர்ந்த வருமானம் பெறும் குடிமக்களை பாதிக்கும் வகையில் அமையும் என்றும், இதன் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 76 டொலர் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பீட்டில் 3 மில்லியன் டொலரை மீறும் வீடுகளுக்கான மாகாண சொத்துவரியின் (School Tax) பகுதி உயர்த்தப்படும். அதனுடன், காலியாக உள்ள அல்லது ஊக முதலீட்டிற்காக வைத்திருக்கும் சொத்துகளுக்கு விதிக்கப்படும் speculation and vacancy tax மூன்று சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.