தேசிய பாதுகாப்பு தொடர்பில் சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவுமில்லை. சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி படுகொலையுடன் தொடர்புடையவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்குரிய விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலைக்குரியது. நாட்டின் சகல பிரஜைகளின் உயிர்களையும் நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். சாதாரண பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது.
அக்குரேகொட பகுதி அதி பாதுகாப்பு வலயம் இல்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்..சட்டத்தரணிகள் தமது சேவை பெறுநர்களுக்காக முன்னிலையாகும் உரிமை உண்டு. அது அவர்களின் தொழில் கடமையாகும்.அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பாதாளக் குழுக்களின் பெயர் குறிப்பிட்டு பொலிஸார் எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை.
உயிரிழந்த சட்டத்தரணியிடம் பொலிஸார் ஏற்கெனவே வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளார்கள். இந்த படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு 12 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணையின் அனைத்து விடயங்களையும் தற்போது குறிப்பிட முடியாது.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். அதனைத் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விடயங்கள் அறிக்கையிடப்படும். பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு ஊடாக தகவல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.