பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பில் ஒன்றுகூடிய பெண் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரிந்த இஸ்ரேலியக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
நீண்டகாலமாக காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த தாக்குதல்கள் அண்மையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இதுவரை காலமும் பலஸ்தீனத்தில் பாரிய மனிதப்பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் நிகழ்த்திய இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை (21) கொழும்பில் உள்ள பலஸ்தீனத்தூதரகத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை கவனயீர்ப்புப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்றைய தினம் பலஸ்தீனத்தூதுரகத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணியில் பங்கேற்றிருந்த பெண் செயற்பாட்டாளர்கள் ‘பலஸ்தீனத்துக்கு விடுதலை’, ‘போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுங்கள்’, ‘போலியான தற்காலிகப் போர்நிறுத்தம்’, ‘செம்மணி முதல் காஸா வரை – நிலம் மறக்காது’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்துடன் பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் கோஷங்களையும் எழுப்பினர்.
மேற்படி பேரணி ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி நகரத்தொடங்கிய வேளையில், பொலிஸாரும் அவர்களுக்குச் சமாந்தரமாக ஐ.நா அலுவலகம் நோக்கி நகர்ந்தனர்.
பேரணியினர் ஐ.நா அலுவலக அதிகாரியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
அங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக மற்றும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் தற்காலிகப் போர்நிறுத்தம் முற்றிலும் பொய்யானது எனவும், அதனையும் மீறி கடந்த சில தினங்களில் சுமார் 200 பேர் வரை இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேலையும், அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவையும் தான் வன்மையாகக் கண்டித்தாகத் தெரிவித்தார்.
மேற்படி அமைப்பின் செயற்பாட்டாளர் அனீஷா ஃபிர்தௌஸ், பலஸ்தீனத்தில் பெரும் எண்ணிக்கையான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார்.