பருத்தித்துறை நகர சபையின் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளட் போலினால் இன்று திங்கட்கிழமை (15) சமர்ப்பிக்கப்பட்ட பருத்தித்துறை நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் (பாதீடு) ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை அமர்வு காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சென் டீ போல் டக்ளட் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது பருத்தித்துறை நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நகர பிதாவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை (ஊசி) உறுப்பினர் ஒருவரும் வாக்களித்திருந்தனர். தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகியவற்றை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். இதையடுத்து ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.
இச் சபை அமர்வின் போது வல்வெட்டித்துறை நகரசபை செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமார் பதில் செயலாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மரக்கறி சந்தை குத்தகை மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய குத்தகை விடயம் தொடர்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு கோரப்பட்ட போது தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.