‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான ‘நாட்டை மேம்படுத்தும் அழகான கிராமம்’ எனும் கருப்பொருளின் கீழ், நுவரெலியா மாவட்டத்தின் பம்பரக்கலை கிராமத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் முக்கிய நிகழ்வாக, பம்பரக்கலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புதிய கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா திங்கட்கிழமை (16.03.2026) காலை 8:30 மணியளவில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
இக்கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்கவும் அரசாங்கத்தினால் மொத்தம் ரூபாய் 147,282,460 (147 மில்லியன்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. துசாரி தென்னகோன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சருமான வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் உபாளி வணிகசேகர, நுவரெலியா பிரதேச செயலாளர், மதகுருமார்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் ஊடாக பம்பரக்கலை கிராமம் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு மாதிரி கிராமமாக மாற்றப்படும் என இதன்போது எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.