ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைக்கு இடையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை 05 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளை முழுமையாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கடந்த 48 மணிநேரமாக இரு நாடுகளுக்கும் இடையில் “மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள” உரையாடல்கள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையாடல்கள் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் ஆழமான மற்றும் விரிவான முறையில் நடைபெறவுள்ளதாகவும், அவற்றின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமையுமானால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social இல் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளை முழுமையாக தீர்க்கும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவும் ஈரானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் நீடித்து வந்த பதற்ற நிலையை தற்காலிகமாக குறைக்கும் முன்னேற்றமாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. அதேவேளை, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் முடிவுகளே எதிர்கால நிலைப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.