நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்;கு உடனடி தீர்வு கிடைக்காவிடின், நாளை கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உறவினர்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாக சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்; சுதேஷ் நந்திமால் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய மோதல் சம்பவமானது தற்செயலாக நடந்தது ஒன்றல்ல. சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையில் 1/4 பங்கு உத்தியோகஸ்தர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 650 பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் 2000 இற்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 250 முதல் 300 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால், கைதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகிய இருதரப்பும் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தீவிர அழுத்தமே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். இந்த நிலைமையில் சிறை அதிகாரிகளோ அல்லது கைதிகளோ தன்னிச்சையாக மோதிக்கொள்ளவில்லை. அரசாங்கம் ஏற்படுத்திய நெருக்கடியே இவர்களை மோதவிட்டுள்ளது.
இந்த மோதல்களில் கைதிகள் மட்டுமன்றி சிறை உத்தியோகஸ்தர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். சிறைக்குள் நிலவும் அதிக நெரிசலால் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்கனவே 5 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். முறையான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தினாலேயே பெண் கைதிகள் சிறைக்குள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பெண் கைதியொருவர் மருத்துவப் பரிசோதனைக் கருவியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு குறியீட்டு ரீதியாகப் போராடியதன் மூலம் சிறைச்சாலைகளின் சுகாதாரப் பேரழிவு அம்பலமாகியுள்ளது.
தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாவர். காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தால் வீதியில் செல்வோர் மீதும் போதைப்பொருள் திணிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு சிறைக்கூண்டுகளை விடுத்து, விஞ்ஞானபூர்வமான புனர்வாழ்வுத் திட்டமே அவசியமாகும். மேலும், இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை வராமல் பல கைதிகள் 2 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்திலும் பல கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக்கப்பட்டு, மேல்முறையீட்டில் விடுதலையான அதிகாரிக்கு இந்த அரசாங்கத்தின் அமைச்சர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது ‘சிறைக்குள் நடக்கும் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு’ எனக் கூறியதை நினைவூட்ட விரும்புகிறோம். எனவே இந்த மரணங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
இதற்குள் ஏதேனும் அரசியல் சதித்திட்டம் இருக்கிறதா என அரசாங்கம் ஆராய வேண்டும். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்ற சம்பவங்களுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்காவிட்டால், கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உறவினர்களைத் திரட்டி நாளை வீதியில் இறங்கிப் போராட தயார் என்றார்