நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால், அண்மைய காலங்களில் மிகப்பாரிய அழிவை நாடு சந்திக்க நேரிட்டுள்ளதாகவும், இந்த நிலைமையை விரைவாகக் கடந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆளுநர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு பரந்த பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்திலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரச பொறிமுறைக்கு அசைக்க முடியாத பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வழக்கமான சுற்றறிக்கைகள் மற்றும் அன்றாட வேலை முறைகளில் சிக்கிக் கொள்ளாமல் நாட்டிற்காக செயற்திறனாக பணியாற்றுமாறு அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
திங்கட்கிழமை (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து zoom தொழில்நுட்பத்தின் மூலம் ஆளுநர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மின்சாரம், குடிநீர் தேவைகள், பாதைகளை புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் வைத்தியசாலைகளை சீர்செய்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செயல்படுத்துவது
குறித்தும், இந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் குறித்தும் மாகாண ரீதியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அனர்த்தத்தினால் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு, சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கி, அவர்களைப் பராமரிப்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாக மாறியுள்ளது என்றும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வலுப்படுத்துவதிலும் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த மீள்கட்டமைப்புச் செயல்முறை முறையான திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதன்படி, தமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதம், சேதத்தின் அளவு மற்றும் அதை மீட்டெடுக்க தேவையான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளர்களுக்கு அறிவித்தார்.
மேலும், கடுமையான அனர்த்தத்தைச் சந்தித்த பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்காக, குறைவாக பாதிப்படைந்த பகுதிகளிலிருந்து பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை ஈடுபடுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பேரழிவிற்கு உள்ளான நாட்டின் விவசாயத்தை மீண்டும் தொடங்க தேவையான விதை நெல், உரம் மற்றும் விதைகள் உள்ளிட்ட உள்ளீடுகளை வழங்கவும், சேதத்தை உடனடியாக சீர்செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்போது, முறையான அறிக்கையின் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, கடைசி விவசாயி வரை பயிர் சேதம் குறித்த தகவல்களை உடனடியாக சேகரிக்குமாறு பிரதேச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், இது வரவிருக்கும் பெரும்போகத்தை வெற்றிகரமாக மாற்றும் என்றும், நாட்டிற்கு அவசியமான நெல் அறுவடையைப் பெற உதவும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தம் காரணமாக சேதமடைந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளுக்கு தேவையான
உதவிகளை வழங்கி அவற்றை மீண்டும் கட்டியெழுப்பவும் வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
500 இலட்சம் ரூபா வரை செலவிட பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், 2025 வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பாராத செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 30 பில்லியன் ரூபாய்க்கு மேல் எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, மேலும் தேவைப்பட்டால், பாராளுமன்ற குறைநிரப்பு மதிப்பீடுகள் மூலம் நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரித்துக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டதுடன், எனவே, தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்து அறிவிக்குமாறும், அந்த நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தொடர்பாடல் வலையமைப்புகளை விரைவாக சீர்செய்வது குறித்து முக்கிய தொடர்பாடல் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, சில பாரிய மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தை சீர்செய்ய சிறிய காலக்கெடு தேவைப்படும் என்றும், ஆனால் வைத்தியசாலைகள், முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய அரச அலுவலகங்களை மிக விரைவாக மின்சாரம் வழங்க வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கிணறுகள் மற்றும் சமூக நீர் திட்டங்கள் மூலம் முக்கிய வடிகால் கட்டமைப்புகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மீள்கட்டமைப்புச் செயல்முறை ஒரு வலுவான பொறிமுறையின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளை மேலும் திறம்படச் செய்ய அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமித்து, அனைத்து நடவடிக்கைகளையும் மையப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், பொருளாதாரத்தினால் இந்த பேரழிவைத் தாங்க முடியாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்காக அனைவரின் ஆதரவையும் பெற வேண்டும் என்றும், இதற்காக ஒரு வலுவான நிதியத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அரச மற்றும் தனியார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முகாமைத்துவக் குழுவால் அதை நிர்வகிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடிக்கு அரசாங்கத்தால் மாத்திரம் தனித்து தீர்வைக் காண முடியாது என்றும், இதற்காக தனியார் துறையின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச சார்பற்ற அமைப்புகள், தன்னார்வ மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள், வர்த்தக சமூகம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் மிகவும் வலுவான உறவுகளை உருவாக்குவதன் மூலம் இந்த செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.