முதல்முறையாக நடிகரானது குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேட்டி ஒன்றில் தனக்கு நடிகர் ரஜினிதான் தன்னம்பிக்கை அளித்தார் எனக் கூறினார்.
சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வித் லவ் என்ற இந்தப் படம் உருவாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷேன் ஜீவிந் தற்போது வித் லவ் என்ற படத்தில் நாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார்.
காதலர் தின வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தின் டீசர், பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளன.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிக்க முடிவெடித்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
டூரிஸ்ட் ஃபேமலி படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்குவதாக இருந்தேன். முதல்முறையாக சௌந்தர்யா மேமை சந்தித்தபோது வசீகரமான முகம் இருக்கிறதெனக் கூறினார். நானும் ஏதோ சும்மா சொல்கிறார் என இருந்துவிட்டேன்.
பின்பு ஒருநாள் ரஜினி சாரை சந்தித்தேன். அதற்கு முந்தைய நாள் எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வேண்டுமா? நடித்தால் அடி வாங்குவேனா? என்ற குழப்பத்தில் இருந்தேன்.
நாயகி வேறு அனஸ்வரா என்பதால் அவர் பக்கத்தில் நான் எப்படி இருப்பேன் என்ற குழப்பம் இருந்தது.
ரஜினி சாரை சந்தித்தேன். அவர் படத்தைப் பாராட்டி பேசினார். பேசும்போது, “சூப்பர்ங்க, ஹீரோங்க” என்றார். இயக்குநர் என்ற நாற்காலி எப்போதுமே இருக்கும். அதனால், இதைச் செய்வது நல்ல விஷயம், வாழ்த்துகள் என்றது எனக்கு இருந்த எல்லா தாழ்வு மனப்பான்மையும் உடைந்தது என்று பேசினார்.