அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 4வது சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப்பிரிவின் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆர்.எம்.நிப்ராஸ் 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் 3ம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இவருக்கான கெளரவிப்பு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த வீரரை சக உத்தியோகத்தர்கள் இணைந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ,குறித்த வீரரின் குடும்பஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆர்.எம்.நிப்ராஸ், மிக நீண்ட நாள் கனவாக இருந்தது இவ்வாறான சாதனைகளை சர்வதேச மட்டத்தில் படைக்க வேண்டும் எனவும்,எனது அயராத முயற்சியால் தற்போது அடைந்துள்ளேன் எனவும், தனக்கான இந்த கெளரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்த பிரதேச செயலாளருக்கும் தன்னை இந்த வெற்றியை அடைவதற்கு முழு திறனுடன் திறம்பட பயிற்றுவிப்பை வழங்கிய விளையாட்டு உத்தியோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான கே.எம்.ஹாரிஸ் அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.