தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது குறித்த சுற்று நிரூபத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே 5 மாவட்டங்களுக்கு இது தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுக்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மேலதிக செயலாளர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், காணி ஆணையாளர் நாயகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அத்தோடு குருணாகல், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.
அநுராதபுரத்தில் 213 வீடுகள் முழுமையாகவும், 3008 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. முழுமையாக சேதமடைந்தவற்றில் 14 வீடுகளின் உரிமையாளர்களைத் தவிர, ஏனையோருக்கான கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு நிர்மாணப்பணிகளையும் ஆரம்பித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதிலேயே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு எவ்வித சேத மதிப்பீடுகளும் இன்றி இரு கட்டங்களாக 5 இலட்சம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்று நிரூபத்தில் காணப்படும் சில சொற்களிலுள்ள குழப்பங்களே இந்த கொடுப்பனவுகளை வழங்குவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே அவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தும் சொற்களில் மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வீடுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய குழுக்களை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள் தேவையா? , தேவையெனில் அவை யாருக்கு தேவை? , எண்ணிக்கை மற்றும் இடம் என்பவை குறித்து இந்த குழு தீர்மானிக்கும். இது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களுக்கமைய அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும்.
குறிப்பாக மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்களை முற்றாக வெளியேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வீடுகளை அமைப்பதற்கு அனுமதியளிக்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தமது காணியுடன் இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு அரச காணிகள் வழங்கப்படும். அவ்வாறில்லை எனில் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சமூகக் குடியிருப்புக்களை அமைத்து அவற்றில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.