மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார். அதற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது.
விமானம் எட்டு பயணிகளையும், இரண்டு பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற நிலையில், விபத்து நடந்த பல மணி நேரத்திற்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.