ஜனநாயகன் படத்திற்காக ட்வீட் போட்டதோடு நின்றுவிடாமல் தற்போது அது ரிலீஸாக வேண்டும் என்று பேசியிருக்கும் சிம்புவுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால் சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகாது என்று அதை தயாரித்த கே.வி.என். நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து சென்சார் போர்டு சிக்கல் தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றத்திற்கும், பிறகு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் ஜனநாயகன் குறித்து சிம்பு சொன்ன கருத்து வைரலாகிவிட்டது.
ஜனநாயகன் தொடர்பாக முன்பே ட்வீட் செய்த சிம்பு தற்போது பேட்டி ஒன்றில் கூறியதாவது, இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் இருந்திருக்கிறார் விஜய் அண்ணா. அவர் கடைசியாக நடித்திருக்கும் படம் ரிலீஸாக வேண்டும். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றே ட்வீட் செய்தேன் என்றார். தனக்கு அரசியலும் தெரியாது, அதில் அனுபவமும் கிடையாது, அது குறித்து பேச தான் சரியான ஆளும் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.