பிராம்ப்டன் — ஒன்டாரியோ அரசு, கோகா-கோலா கனடா போட்டிலிங் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் 141 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான முதலீட்டை வரவேற்கிறது. இம்முதலீடு, பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி, விநியோக மற்றும் விற்பனை மையத்தைப் புதுப்பித்து விரிவாக்குவதற்காக செய்யப்படுகிறது.
இவ்விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 20 மில்லியன் கூடுதல் கேஸ்களை உற்பத்தி செய்யக்கூடிய நவீன தொழில்நுட்ப உற்பத்தி வரிசை நிறுவப்படும். கட்டுமான காலத்தில் 500 வரை உயர்ந்த ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பான உற்பத்தி மற்றும் வேளாண்-உணவு உற்பத்தித் துறைகளில் மாகாணத்தின் முன்னணி நிலையை இது வலுப்படுத்தும் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“உலகத் தரம் வாய்ந்த ஒன்டாரியோ தொழிலாளர்களின் திறமைகளில் நம்பிக்கை வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என ஒன்டாரியோ முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார். “எங்கள் அரசு, வரிவிதிப்பை குறைப்பதன் மூலம் மற்றும் தேவையற்ற நிர்வாகத் தடைகளை நீக்குவதன் மூலம் தொழிலாளர்களை பாதுகாத்து, புதிய முதலீடுகளை ஆதரித்து, G7 நாடுகளிலேயே மிகுந்த போட்டித்திறன், நிலைத்தன்மை மற்றும் தன்னிறைவு கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கத் தொடரும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
G7 நாடுகளிலேயே மிக வலுவான, நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் போட்டித்திறன் மிக்க பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கில், ஒன்டாரியோ அரசு வரிவிதிப்பையும் நிர்வாகத் தடைகளையும் குறைத்து, ஆண்டுதோறும் வணிகங்களுக்கு 12 பில்லியன் டொலர் வரை சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒன்டாரியோ 213 பில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததுடன், 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.