இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ் லங்கா’ (Krrish Lanka) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அதனைத் தவறாகப் பயன்படுத்தியதாக (பணச் சலவை மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த விவகாரம் தொடர்பான முக்கிய இந்திய சாட்சிகள் இருவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இதனைக் கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் சட்டபூர்வ நடைமுறையைப் பின்பற்றி, அந்த இரு இந்திய சாட்சிகளுக்கும் உடனடியாக அழைப்பாணை (Summons) விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்