யாழ்.துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(10) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று காலை சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடியுள்ளார்.
இதன்போது, கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணை மேற்கொண்டார். மேலும், நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.