கம்போடியாவில் ஆன்லைன் மோசடி மையத்தில் வேலை பார்த்து வந்த, 57 தென்கொரியர்கள், 29 சீனர்களை அந்நாட்டு ஆன்லைன் மோசடி தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர்.
‘டேட்டா என்ட்ரி’ வேலை என்ற பெயரில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் மோசடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன.
திருமணமாகாதவர்கள் அல்லது விவாகரத்தானவர்களை குறிவைத்து பணம் பறிப்பது, போலி கிரிப்டோகரன்சி முதலீடுகள், தொலைபேசியில் வங்கி ஊழியராக நடித்து மோசடி செய்வது என விதவிதமான இணைய வழி குற்றங்களை செய்யச் சொல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது.