புதன்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு ஊடகவியலாளர் கொல்லப்பட்டும், மற்றொருவர் காயமடைந்தும் உள்ள நிலையில், இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் லெபனான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய அமல் கலீல் (Amal Khalil) கொல்லப்பட்டார்; சுயாதீன புகைப்படக் கலைஞர் ஜைனப் ஃபராஜ் (Zeinab Faraj) காயமடைந்தார்.
தங்களுக்கு முன்னால் சென்ற வாகனம் முதல் வான்வழித் தாக்குதலில் சிக்கி இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஊடகவியலாளர்கள் தஞ்சம் கோரி ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது அவர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன், கிராமத்திலிருந்த ஊடகவியலாளர்களைச் சென்றடைய முயன்ற அடையாளமிடப்பட்ட ஆம்புலன்ஸ் ஒன்றையும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வேண்டுமென்றே இலக்கு வைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இருப்பினும், மீட்புக் குழுவினர் அப்பகுதியைச் சென்றடைவதை தாம் தடுக்கவில்லை என்றும், ஊடகவியலாளர்களைத் தாம் இலக்கு வைப்பதில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் (IDF) மறுத்துள்ளது.
“தொடர்ச்சியான அணுகுமுறை”
கொல்லப்பட்ட அமல் கலீல் (43) லெபனான் நாளிதழான அல்-அக்பரில் பணியாற்றியவர். லெபனான் பிரதமர் நவாப் சலாம் கூறுகையில், “ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதும், அவர்களுக்கு நிவாரணக் குழுக்கள் செல்வதைத் தடுப்பதும், அக்குழுக்கள் வந்தடைந்த பின் மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்தை இலக்கு வைப்பதும் விவரிக்கப்பட்ட போர்க்குற்றங்களாகும்,” என்றார்.
தெற்கு லெபனானில் ஊடகப் பணியாளர்களை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் இலக்கு வைப்பது ஒரு “நிரந்தர அணுகுமுறை” என்றும் அவர் சாடினார். இது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் லெபனான் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் விளக்கம்
இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹிஸ்புல்லா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பிலிருந்து வெளியேறிய இரண்டு வாகனங்களை அடையாளம் கண்டோம். அதில் ஒன்று போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எமது துருப்புகளுக்கு உடனடி அச்சுறுத்தலாக அமைந்ததால் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று கூறியுள்ளது.
எவ்வாறாயினும், லெபனான் சுகாதார அமைச்சு கூறுகையில், முதல் தாக்குதலிலிருந்து தப்பிக்க அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்த அமல் கலீல் மற்றும் ஜைனப் ஃபராஜ் ஆகியோரை இஸ்ரேலிய படைகள் பின்தொடர்ந்து சென்று அந்த வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்குத் தடை
காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க லெபனான் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் வந்தபோது, இஸ்ரேலியப் படைகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய முடியவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை
ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் (CPJ) படி, கடந்த ஓராண்டில் லெபனானில் குறைந்தது 7 ஊடகவியலாளர்கள் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், லெபனான் அதிகாரிகளின் தகவல்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 2,475 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 274 பெண்களும் 177 குழந்தைகளும் அடங்குவர்.
இந்தத் தாக்குதல், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தத்தை நீடிப்பது குறித்து வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருந்த சூழலில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது