உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் இராட்சத ஓர்க்கிட் பூக்கள் பேராதனைத் தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
Grammatophyllum speciosum என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய அளவிலான ஓர்க்கிட் தாவரமாகப் பதிவாகியுள்ளதாகப் பேராதனைத் தாவரவியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஓர்க்கிட் பிரிவுத் தலைவி திருமதி இரோஷணி அந்த்ராதி தெரிவிக்கையில்:
“இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரத்தின் பூக்களைப் பேராதனைத் தாவரவியல் பூங்காவில் பார்க்க முடிகிறது. இந்த மலர்கள் பூத்துள்ள தாவரம் முன்னரே நடவு செய்யப்பட்டது. அதில் தற்போது பூக்கள் பூத்துள்ளன. இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு அளவில் இந்த மலர் வகை காணப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்னரே இப்போது காண முடிகிறது.”
மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமான இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிகமாகப் பரவியுள்ளது. இதன் ஒரு பெரிய தாவரமானது சுமார் ஒரு தொன் எடையைக் கொண்டிருக்கும். இதில் இரண்டு முதல் மூன்று மீற்றர் உயரமுள்ள பூங்கொத்துகள் உருவாகின்றன. இந்த மலர் வகை மிகவும் அரியது என்பதால், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்க்கொத்தைக் கண்டுகளிக்க வருமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.
தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி எச்.சி.பி. ஜயவீர கருத்து தெரிவிக்கையில், பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துள்ள இந்த இராட்சத ஓர்க்கிட் மலர்க்கொத்தைக் கண்டுகளிக்க அனைவரையும் வரவேற்பதாகத் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்களைப் பார்ப்பதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Grammatophyllum speciosum குறித்த உலகளாவிய தகவல்கள்:
பெயர்க் காரணம்: இத்தாவரம் பொதுவாக ‘Tiger Orchid’ (புலி ஓர்கிட்) அல்லது ‘Giant Orchid’ (இராட்சத ஓர்கிட்) என அழைக்கப்படுகிறது. இதன் மஞ்சள் நிற மலர்களில் உள்ள அடர் பழுப்பு அல்லது சிவப்பு கலந்த புள்ளிகள் புலியின் தோல் போன்ற தோற்றத்தைத் தருவதால் இப்பெயர் பெற்றது.
அளவு மற்றும் எடை: கின்னஸ் சாதனைப் புத்தகத்தின்படி, உலகின் மிக உயரமான ஓர்கிட் இனம் இதுவாகும். இதன் ஒரு புதர் அல்லது கொத்து இயற்கையான வசிப்பிடங்களில் இரண்டு தொனுக்கும் (2,000 கிலோகிராம்) அதிகமான எடையைக் எட்டக்கூடியது. இதன் தண்டுகள் (Pseudobulbs) சில சமயங்களில் 2.5 மீற்றர் வரை வளரும்.
வாழ்விடம்: இந்த மலர் இனம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி மற்றும் Tailand ஆகிய வெப்பமண்டல மழைக்காடுகளில் உள்ள பெரிய மரங்களின் மீது (Epiphyte) இயற்கையாகவே வளர்கிறது.
மலர் காலம்: இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது முறையான பருவநிலை மாற்றங்களுக்குப் பிறகே பூக்கும் தன்மை கொண்டது. சில தாவரங்கள் பூப்பதற்குப் பல ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வது இதன் தனித்த சிறப்பம்சமாகும்.