நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவ, மாணவிகள் இன்று காலை 9:50 மணியளவில் ஹோட்டன் சமவெளிப் பகுதியைச் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது ‘உலக முடிவு’ (World’s End) என அழைக்கப்படும் பகுதியில், 23 வயதுடைய வர்சனி சிவகுமார் எனும் மாணவி புகைப்படம் எடுக்க முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து உடனடியாகத் தகவலறிந்த அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் ஹோட்டன் சமவெளிப் பகுதிப் பாதுகாவலர்கள் விரைந்து செயற்பட்டு, பள்ளத்தில் விழுந்த மாணவியை மீட்டனர்.
பள்ளத்தில் விழுந்ததில் மாணவியின் தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. முதலுதவிகளுக்குப் பின்னர் அவர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.