வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின் இணையனுசரணையுடன் பஹ்ரைனால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம், பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 13 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன.
பாதுகாப்புச்சபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான், கட்டார், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள்மீது ஈரான் நடாத்திவரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு சர்வதேச எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் ஈரானின் எந்தவொரு செயலையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடாத்திவரும் தொடர் தாக்குதல்களுக்குமான பதில் நடவடிக்கையாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத்தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தி வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய ஐ.நாவுக்கான பஹ்ரைன் தூதுவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெறும் பிராந்திய விவகாரம் மாத்திரமல்ல எனவும், மாறாக அது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நேரடித் தொடர்புடைய சர்வதேசப் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இந்தத் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துரைத்திருக்கும் ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டுவரும் அப்பட்டமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை இத்தீர்மானம் திட்டமிட்டு மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.