அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வர்த்தக ரீதியான விமான சேவைகள், சனிக்கிழமை (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெஹ்ரானின் இமாம் காமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல், மஸ்கட் (ஓமன்) மற்றும் மதீனா (சவுதி அரேபியா) ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் ஈரானின் வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுமையான வர்த்தக சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்து உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை பாகிஸ்தான் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கப் பிரதிநிதிகள் பாகிஸ்தான் வந்தாலும், அவர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவுடனான எந்தவொரு தொடர்பும் மறைமுகமாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் தூதுவர்களாகச் செயல்படுவார்கள் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி ட்ரம்ப் போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த பின்னர், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முக்கிய கட்டமாக இந்த விமான சேவைகளின் ஆரம்பம் மற்றும் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் பார்க்கப்படுகின்றன.