ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சியின்போது அவருக்கு மிக நெருக்கமான, உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இருந்த சாதுன் சப்ரி அல்-கைசிக்கு (Saadoun Sabri al-Qaisi) எதிரான கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கமைய, அல்-கைசிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈராக் தேசிய பாதுகாப்பு அமைப்பு திங்கட்கிழமை (9) அதிகாரபூர்வமாக அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ உயரதிகாரியாக இருந்த அல்-கைசி, அப்போது இடம்பெற்ற பல கொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்துள்ளதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில், 1980இல் ஈராக்கில் பிரபல மதகுருவான முகமது பாகிர் அல்-சத்ர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலையுடன் அல்-கைசி கொண்டிருந்த நேரடித் தொடர்பு பாதுகாப்பு தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அல்-கைசி தலைமறைவானார்.
தலைமறைவான அவர் கடந்த ஆண்டு ஈராக் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் மதகுரு உட்பட பலரை கொன்றமையும் உறுதிப்படுத்தப்பட்டு, “அவர் மனிதகுலத்துக்கு எதிரான கடும் குற்றங்களை செய்த குற்றவாளி” என தேசிய பாதுகாப்பு சேவை (National Security Service) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.