இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இணங்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது சுமார் 2,764 நபர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தத் தரவுகள் விவாதத்திற்குரியவை என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
போரின் போது காணாமல் போனோர் தொடர்பாக தற்போது அரசாங்கத்திடம் முறையான அல்லது துல்லியமான தரவுத்தளம் (Database) எதுவும் இல்லை.
யுத்த காலத்தில் இரு தரப்பினருமே (அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள்) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், இவ்வாறான செயல்களை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது.
காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எந்தவொரு சர்வதேச பொறிமுறையையும் (International Mechanisms) பின்பற்றுவதற்கு அரசாங்கம் இணங்கவில்லை.
உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமே இதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கும், உண்மையை கண்டறிவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.