இலங்கைக்கு சடுதியாக வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக நாம் இப்போது உலக வல்லரசுகளின் போட்டி எனும் ஈர்ப்பு விசைக்குள் இழுக்கப்பட்டு வருகிறோம். இது நாம் குழப்பத்தை அன்றி, தெளிவை வெளிக்காட்டவேண்டிய தருணமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்.
இந்நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்கள் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி செய்திருக்கும் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை புவிசார் அரசியல் போட்டிகளுக்கான ஒரு களம் அல்ல. இதனை எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி தெளிவாகக் கூறவேண்டும். எமது நாடு, எமது துறைமுகங்கள் மற்றும் எமது கடற்பரப்பில் எந்தவொரு போர்வையிலும் வெளிநாட்டு இராணுவத்தின் அல்லது உளவுத்துறையின் கூறுகள் இருக்கக்கூடாது.
நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதோ, நீர்த்துப்போகச் செய்யக்கூடியதோ அல்லது கட்டம் கட்டமாக சமரசம் செய்துகொள்ளப்படக்கூடியதோ அல்ல.
எமது பிரத்யேக பொருளாதார மண்டலம், கடல் வழித்தடங்கள் உள்ளடங்கலாகத் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். அவற்றை ‘ஒத்துழைப்பு’ எனும் பெயரில் முன்வைக்கப்படும் நீண்டகால மூலோபாய விளைவுகளைக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சகல நாடுகளுடனும் இணைந்து செயலாற்றுவோம். ஆனால் எவருடனும் அணிசேர மாட்டோம்.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தை ஒரு ‘அமைதி நிலவும் மண்டலமாகப்’ பேணுவதற்கு இலங்கை தொடர்ந்து முனைப்புடன் குரலெழுப்பி வருகிறது. இது வெறும் சொல்லாடல் அல்ல. மாறாக இது நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தீர்மானத்தையும் வழிநடத்தும் ஒரு கொள்கையாகும்.
இது பிற நாடுகளின் விவகாரங்களில் சிக்குண்டு தத்தளிப்பதற்கான நேரம் அல்ல. மாறாக இது நாம் உறுதியாக நிற்பதற்கும், எமது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், துணிச்சலுடன் செயலாற்றுவதற்குமான நேரமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.