இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்த அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரி ஃபோட் சிடாஃபா மாராவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், புர்க்கினா பெசோவின் தலைநகர் வாகடூகுவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான குடியிருப்பில் இந்த கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 15 வயதுடையவர்களாவர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட மாரா, அவர்களுக்கு உதவி செய்வதமைக்கு கைமாறாக பாலியல் உறவைக் கோரி வற்புறுத்தியுள்ளார்.
தனது மனைவி வேலைக்குச் சென்ற நேரத்தில் சிறுமிகளைத் தனது இடத்திற்கு வரவழைக்க அவர்களுக்கு அலைபேசிகளை வழங்கியதும், விசாரணையின் போது வீட்டுப் பணியாளரைத் தவறாக வழிநடத்த முயன்றதும் விசாரணையில் அம்பலமானது.
அமெரிக்க நீதித்துறை மேற்கொண்ட ‘ப்ரோஜெக்ட் சேஃப் சைல்ட்ஹுட்’ (Project Safe Childhood) எனும் திட்டத்தின் கீழ் இந்த வழக்கு நடத்தப்பட்டது.
வெளிநாடுகளில் அமெரிக்க குடிமக்கள் செய்யும் குற்றங்களையும் அமெரிக்க சட்டப்படி தண்டிக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“சிறுவர்களை வேட்டையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிகக்கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று அமெரிக்க சட்டத்தரணிகள் இத்தீர்ப்பின் மூலம் எச்சரித்துள்ளனர்.