தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலேரோ வகை லொறியின் சாரதி இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றது. தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் பற்றவைத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது, நகர மையத்தின் வழியாக அதிக வேகத்தில் சென்ற லொறி மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற சந்தேகநபர் தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள வீட்டொன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.