ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தற்றுணிவுடன் பேசினார் என தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா. சாணக்கியன் அதற்கு நான் நன்றிகூறுகின்றேன் என்றார்.
ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பஸ்களில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாயை திறந்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் திருத்த சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச விவசாயத்துறையில் மாற்றம் ஏற்படுத்த போய் நெருக்கடிக்குள்ளாகி வீட்டுக்குச் சென்றார்.அதேபோல் இந்த அரசாங்கமும் தற்போது கல்வியில் மாற்றத்தி ஏற்படுத்தப்போய் நெருக்கடி சந்தித்துள்ளது கல்வி அமைச்சர் நாட்டில் இல்லாத நேரத்தில் கல்வி மறுசீரமைப்பு பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. இதன் பின்னணி என்ன?
இந்த அரசாங்கம் இனவாத அரசாங்கம் என தொடர்ச்சியாக கூறி வருகிறோம்.இதற்கு பல விடயங்களை உதாரணமாக கூற முடியும்..நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் ‘ பல்கலைக்கழக கவுன்சில்’ உள்ளது.தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ பல்கலைக்கழக கவுன்சில்’ உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தில் 8 தமிழர்கள், 5 முஸ்லிம்கள், 2 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 5 தமிழர்கள், 3 முஸ்லிம்கள், 7 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.