இந்த பேரிடர் காலத்திலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான். கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி விளைவு ஒன்றுதான். இம்முறை மழை மற்றும் வெள்ளம் அதிகமாக இருந்ததால் விளைவுகள் அதிகமாகின. ‘முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும் நிலைமை அப்படியே காணப்பட்டிருக்கும்.
இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் குறைவாக இருப்பதால் யாராலும் அற்புதங்களைச் செய்ய முடியாது. ‘கிடைக்கக்கூடிய வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தைக் கொண்டு அரசாங்கம் அதிகபட்சமாகச் செய்ய வேண்டும். யாராவது அதிகமாகச் செய்ய விரும்பினால், அது இங்கே சாத்தியமில்லை.
பேரழிவைத் தடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது பயனற்றது. எவர் ஆட்சியில் இருந்தாலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.