அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்கள் கையளிப்படாத சர்ச்சைகள் தொடர்வதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு – 7 விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம், கொழும்பு -7 ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கொழும்பு -7 சுதந்திர மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை அரசாங்கம் தற்போது பாரமெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பிற அரசியல்வாதிகளால் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட 34 அரசாங்க வீடுகள் தற்போது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 7 இல் 21 வீடுகளும், கொழும்பு 5 இல் 13 வீடுகளும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பௌத்தலோக மாவத்தையில் முன்னாள் அமைச்சர்கள் இந்திக அனுருத்த, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சனத் நிஷாந்த ,கெஹெலிய ரம்புக்வெல்ல, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவண்ண, ஜனக வக்கும்புர, சாந்த பண்டார, டி.பி. ஹேரத், டி.வி. சானக, அருந்திக பெர்னாண்டோ மற்றும் மோகன் பிரியதர்ஷன சில்வா ஆகியோர் ஒப்படைத்துள்ளனர்.