அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களையோ அல்லது அரசியல் ரீதியாகவோ யாரையும் அடக்குவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பேரிடர் நிலைமை குறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் செய்திகளைப் பரப்புவதைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தேவையான நிவாரணங்களை தடையின்றி வழங்கவும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசியல் ரீதியாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு.
ஊடகங்களை அடக்குவதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, அவர்கள் தங்கள் வரம்புகளை அறிந்து செயலாற்றுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அச்சுறுத்தும் பிரச்சாரங்களைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை என்றும் அமைச்சர் கூறினார்.