சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவுக்கு மீண்டும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்து இருந்தார். இதனால், சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ”சீனாவை பற்றி கவலைப்பட தேவையில்லை.அமெரிக்கா சீனாவிற்கு உதவ விரும்புகிறது, அதற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போது அமெரிக்காவின் 100 சதவீத வரி விதிப்புக்கு சீனா மீண்டும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:
சமீபத்திய அமெரிக்க கட்டுப்பாடுகள், தடைகள் மற்றும் அதிக வரி விதிப்பை சீனா உறுதியாக நிராகரிக்கிறது.
எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல.
அமெரிக்கா தனது அணுகுமுறையை சரி செய்ய வேண்டும். இருநாட்டு ஜனாதிபதிகளும் தொலைபேசி வாயிலாக கலந்து ஆலோசிக்க வேண்டும். சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு லின் ஜியான் கூறியுள்ளார்.