அரசாங்கத்தின் கருவூலத்திலிருந்து USD 2.5 மில்லியன் (சுமார் 800 மில்லியன் ரூபாய்) மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொள்ளைக்குப் பின்னால் இருப்பவர் யார் அல்லது அந்தப் பணம் எங்கே போனது என்பது குறித்து நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளால் இன்னும் துல்லியமான பதில்களை வழங்க முடியவில்லை.
“மணி ஹெய்ஸ்ட்” (Money Heist) நாடகக் காட்சியைப் போன்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க அரசாங்கம் அவசரமாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டியிருந்தது. எனினும், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அரசாங்கம் திணறியது.
மத்திய வங்கியின் திறமையான அதிகாரிகளால் பல மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையை எப்படிக் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தெரியவந்துள்ள முக்கிய தகவல்கள்:
-
கொள்ளையிடப்பட்ட விதம்: ஹேக்கர்கள் (Hackers) கருவூலத்தின் மின்னஞ்சல் அமைப்பிற்குள் புகுந்து, யாருக்கும் தெரியாமல் தவணை முறையில் இந்தப் பணத்தைத் திருடியுள்ளனர்.
-
காலப்பகுதி: இந்தக் கொள்ளை ஒரே நாளில் நடக்கவில்லை. 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இது நடந்துள்ளது. இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய ஒரு கொடுப்பனவின் போது நடந்த ஹேக்கிங் முயற்சியைத் தொடர்ந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
நடவடிக்கை: திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இது குறித்துத் தெரிவிக்கையில், பணத்தைத் திருடிய சைபர் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப் புலனாய்வு அமைப்புகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால் இது முன்னரே அறிவிக்கப்படவில்லை என்றார். இது தொடர்பான புகார் மார்ச் மாதமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பாதிக்கப்பட்ட தரப்பு: கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் பின்னர், ஆஸ்திரேலிய கடன் வழங்குநர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் கொடுப்பனவையே ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
-
யார் பொறுப்பு?: முறையான நிதி ஒழுங்குமுறைகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்களா அல்லது அவர்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
திருடப்பட்ட இந்தப் பணத்தை மீட்க முடியாவிட்டால், அந்தக் கடனை மீண்டும் அரசாங்கம் எவ்வாறு செலுத்தும் என்ற கேள்விக்கு, “விசாரணைகள் முடிந்த பின்னரே இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று திறைசேரி செயலாளர் பதிலளித்தார்.