உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலே கொழும்பு தேசிய மருத்துவமனையில் 100 நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது விசாரணைகளை தடுப்பதற்கான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என அரசவழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுரேஸ்சாலேக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதே, கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேகர முன்னிலையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்பட்டன.
வழக்கு விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கையில்; இந்த விசாரணை தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சுரேஸ்சாலேகடந்த ஜூன் 7 ஆம் திகதி முதல் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது உள்நோயாளியாக 100 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்றார்.
விசாரணையின் முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சுரேஸ்சாலேநீண்டகாலமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் சூழ்நிலை குறித்து புலனாய்வாளர்களுக்குக் கடுமையான சந்தேகங்கள் உள்ளதாக வாதிட்டார்.
சுரேஸ்சாலே ஆரம்பத்தில் தடுப்புக் காவலில் இருந்தபோது தனக்குக் கடுமையான மன உளைச்சலும் தற்கொலை எண்ணங்களும் இருந்ததாகக் கூறி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனநல அறிக்கையை ஆதாரமாகக் காட்டியதாக அவர் தெரிவித்தார். அரசுத் தரப்பின் கூற்றுப்படி, ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சல்லே உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கி, பின்னர் ஜூன் 7 அன்று தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேகநபர் கடுமையான மருத்துவப் பிரச்சினைகள் எதினாலும் பாதிக்கப்படாதபோதிலும், தேவையற்ற முறையில் மருத்துவமனையில் தங்கியிருப்பதாகப் புலனாய்வாளர்கள் சந்தேகப்பதாக அரசுத் தரப்பு மேலும் சுட்டிக்காட்டியது.
இந்த நீண்டகால மருத்துவமனை வாசமானது, விசாரணையைத் தாமதப்படுத்துவதையும், விசாரணையில் உள்ள குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் நம்புவதாகப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையை “முன் திட்டமிடப்பட்ட மருத்துவ சதி” எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் தொடர்புடைய மருத்துவ அறிக்கைகள் ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறித்து நீதிமன்றம் ஆராய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தச் சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இலங்கையின் தேசிய மருத்துவமனை இயக்குநருக்கு அழைப்பாணை பிறப்பித்ததுடன், சுரேஸ்சாலேயின் நிலை குறித்த மருத்துவ அறிக்கைகள் ஏன் வழங்கப்படவில்லை என்பதை விளக்க செப்டம்பர் 22 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
சுரேஸ்சாலேயின் சுகாதார நிலையை மதிப்பிடுவதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறித்தும் விளக்கமளிக்குமாறு மருத்துவமனை இயக்குநருக்கு நீதிமன்றம் மேலதிக உத்தரவைப் பிறப்பித்தது.
சுரேஸ்சாலேயின் நிலைமை குறித்தும், அவருக்குத் தொடர்ந்து உள்நோயாளி சிகிச்சை தேவையா என்பது குறித்தும் விரிவான மருத்துவ மதிப்பீடுகளை நீதிமன்றம் முன்னர் கோரியிருந்ததாக நீதவான் சுட்டிக்காட்டினார். இருப்பினும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும் அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதன் விளைவாக, நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாததற்காகக் காரணம் காட்டுமாறு (Show cause) தேசிய மருத்துவமனையின் இயக்குநருக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விடயங்களுடன் சல்லே எவ்வாறு தொடர்புபட்டிருந்தார் எனப் புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள் என்பது குறித்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சமர்ப்பிப்புகளின் மேலதிக விபரங்கள் இன்றைய தினத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது