அரசாங்கத்தின் கடன் தொகை 190 பில்லியன் ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ முற்றாக நிராகரித்துள்ளார்.
உத்தியோகபூர்வ தரவுகளை ஆராயாமல் நாட்டின் கடன் நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்புவது துரதிர்ஷ்டவசமானது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்தின் கடன் 190 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், கடன் எவ்வாறு அதிகரித்தது என்பதற்கான தெளிவான விளக்கத்தை அந்த அறிக்கைகள் வழங்கவில்லை என்றும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சில தரவுகள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான முழுமையான விவரங்களை உள்ளடக்கிய கடன் செய்திக்குறிப்பு (Debt Bulletin) மூலமாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டு அடிப்படையில் வெளியிடப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தனிப்பட்ட நாடுகள், பலதரப்பு அமைப்புகள், இருதரப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக மூலங்களிலிருந்து பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய விரிவான விவரங்கள் இந்த உத்தியோகபூர்வ அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளன என அவர் விளக்கமளித்தார்.
எனவே, அரசாங்கத்தின் கடன் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்போ அல்லது செய்திகளை வெளியிடும் முன்போ உத்தியோகபூர்வ பதிவுகளையும் சரிபார்க்கப்பட்ட தரவுகளையும் பரிசீலிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
உத்தியோகபூர்வ தரவுகளின் அடிப்படையில், ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசாங்கத்தின் கடன் அதிகரிக்கவில்லை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.