நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள கொல்செஸ்டர் பிராந்தியத்தில் (Colchester County) மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக நோவா ஸ்கோஷியா ஆர்.சி.எம்.பி (RCMP – அரச கனடிய குதிரைப் பொலிஸ்) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி, நோவா ஸ்கோஷியாவின் ‘டிபர்ட்’ பகுதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ஒரு ஆணுடையது என்பதும், அவரது மரணத்தில் குற்றச் செயல்கள் (Criminality) அடங்கியிருக்கலாம் எனத் தாம் நம்புவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், நோவா ஸ்கோஷியா மருத்துவ பரிசோதனை சேவையின் (Nova Scotia Medical Examiner Service) உதவியுடன், இறந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் புலனாய்வாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
“மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது முதல் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,” என நோவா ஸ்கோஷிய ஆர்.சி.எம்.பி.யின் பொதுத் தகவல் அதிகாரி கோப்ரல் மெண்டி எட்வர்ட்ஸ் (Cpl. Mandy Edwards) தெரிவித்துள்ளார்.
“சமூகத்திற்குள் பல்வேறு வதந்திகளும் ஊகங்களும் உலாவுவதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, இது மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும், விசாரணையைச் சரியாக முன்னெடுப்பதே எங்களின் முதன்மைப் பொறுப்பாகும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
விசாரணைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளதால், தற்சமயத்திற்கு மேலதிக தகவல்கள் எதையும் வெளியிட முடியாது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், 902-896-5060 என்ற இலக்கத்தின் ஊடாக ‘நார்த்ஈஸ்ட் நோவா ஆர்.சி.எம்.பி’ (Northeast Nova RCMP) பிரதான குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.