சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு மூதூர் படுகொலை உள்ளடங்கலாக முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
போரின் தீவிரத்துக்கு உள்ளாகியிருந்த திருகோணமலைக்கு அருகில் அமைந்துள்ள மூதூர் நகரில் 2006ஆம் ஆண்டு ஒகஸ்ட் 4ஆம் திகதி 17 தன்னார்வ உதவிப் பணியாளர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வேளையில் நான் இலங்கையில் இருந்தேன். அன்றிலிருந்து நான் இச்சம்பவம் குறித்து எழுதி வருகிறேன். ஆனால் இப்படுகொலைகள் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்த பின்னரும், இதற்குப் பொறுப்பானவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2006ஆம் ஆண்டு மோதல் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில், ஒகஸ்ட் 2ஆம் திகதி விடுதலைப்புலிகள் மூதூரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவ்வேளையில் பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கிவந்த சர்வதேச தொண்டு நிறுவனமான ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ அமைப்பைச் சேர்ந்த, இலங்கையில் பணியாற்றிவந்த தன்னார்வ உதவிப் பணியாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் அவர்களது அலுவலக வளாகத்துக்குள் முடங்கியிருந்தனர்.
அதனையடுத்து ஒகஸ்ட் 4ஆம் திகதி நண்பகல் விடுதலைப்புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்புப் படையினர் மீண்டும் அந்நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தாம் மிகப் பயங்கரமான ஒரு உண்மையைக் கண்டறிந்ததாக அறிவித்தனர்.
அதன்படி அத்தொண்டு நிறுவன அலுவலக வளாகத்துக்குள் 15 தன்னார்வப் பணியாளர்களின் உடல்கள் தலையிலும் கழுத்திலும் மிக அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காயங்களுடன் கண்டறியப்பட்டன. அதுமாத்திரமன்றி தப்பிச் செல்ல முயன்றதாகத் தோன்றக்கூடிய மேலும் இரு பணியாளர்களின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்திலிருந்து கண்டறியப்பட்டன.
அச்சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் ஒரு முஸ்லிம் நபரைத் தவிர ஏனைய அனைவரும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் (13 ஆண்கள், 4 பெண்கள்) தமிழர்கள் என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்தது.
இருப்பினும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஊடாக இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட தகவல்கள் பொய்யானவை எனக் கண்டறியப்பட்டது. அதுமாத்திரமன்றி இந்தப் படுகொலைகளுக்கு இரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலங்கை கடற்படையின் விசேட பிரிவினருமே பொறுப்பாளிகள் என்றும், பொலிஸ் மற்றும் நீதித்துறை உயரதிகாரிகள் இதனை மறைப்பதற்கு முற்பட்டதாகவும் அவ்வமைப்பு கண்டறிந்தது.
2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 26 ஆண்டுகால உள்நாட்டுப்போரின்போது இருதரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான குற்றங்களில் மூதூர் படுகொலையும் ஒன்றாகும். அதுமாத்திரமன்றி அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்த போதிலும், அதுசார்ந்த தன்முனைப்புடன் செயற்படாத முக்கிய 12 மனித உரிமை வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். எனினும் மூதூர் படுகொலையில் கொல்லப்பட்ட தன்னார்வப் பணியாளர்களின் குடும்பத்தினரும், மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் உறவுகளும் பல ஆண்டுகள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.
மூதூர் படுகொலை உள்ளடங்கலாக முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
அத்தோடு யுத்தகால வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான மீறல்களால் பாதிக்கப்பட்ட சகலருக்குமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாடுகள் இலங்கை மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.