Snapchat, TikTok மற்றும் Fortnite ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் உள்ள குறைந்தபட்சம் 15 குழந்தைகளைக் கவர்ந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற தொராண்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் 68 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
சமூக ஊடகங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருட்கள் (CSAEM) பதிவேற்றப்படுவதாகக் கடந்த மார்ச் மாதம் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகப் பொலிஸார் புதன்கிழமை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் பிராட்வியூ வீதி (Broadview Street) மற்றும் டான்ஃபோர்த் அவென்யூ (Danforth Avenue) அருகில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார் சோதனையிட்டனர். அங்கு குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான மின்னணு சாதனங்களைக் கண்டறிந்த புலனாய்வாளர்கள், அவற்றில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
மேலும், சந்தேகநபர் இணையத்தில் குழந்தைகளைக் கவரவும் துஷ்பிரயோகம் செய்யவும் பெண் வேடமிடுவது உட்படப் போலி அடையாளங்களைப் பயன்படுத்தியதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
57 வயதான மெடின் உகுர் (Metin Ugur) என்பவர் ஏப்ரல் 16 அன்று கைது செய்யப்பட்டு, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை அணுகுதல் மற்றும் கைவசம் வைத்திருத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.
அவர் தனது ஆண் இணைய அடையாளத்திற்காக “Chase_woolf”, “Chase_woolf13”, “Noah.scout”, “Noah_scout_13” ஆகிய பெயர்களையும், பெண் அடையாளத்திற்காக “Hey_woolfie” என்ற பெயரையும் பயன்படுத்தியதாகப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். உகுர் தனது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ள Discord மற்றும் Instagram ஆகிய தளங்களையும் பயன்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
விசாரணை தீவிரமடைந்த நிலையில், அல்பெர்ட்டா, ஒன்ராறியோ, கியூபெக் ஆகிய பகுதிகள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் மேலதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பொலிஸார் கண்டறிந்தனர்.
இதன் விளைவாக, 18 வயதுக்குட்பட்ட நபரைக் கவர முயன்றமைக்கான 14 குற்றச்சாட்டுகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட நபருக்குப் பாலியல் ரீதியான தகவல்களைக் கிடைக்கச் செய்தமைக்கான 7 குற்றச்சாட்டுகள் உட்பட மேலதிகமாக 61 குற்றச்சாட்டுகளைப் புலனாய்வாளர்கள் உகுர் மீது சுமத்தியுள்ளனர்.
“இணையவழிச் சிறுவர் சுரண்டலுக்கு எல்கைகள் இல்லை, அதேபோல் தான் எங்கள் விசாரணைகளுக்கும் எல்கைகள் இல்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, சான்றுகள் எங்குச் செல்கிறதோ அங்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவோம்” என்று இணையவழி சிறுவர் சுரண்டல் பாலியல் குற்றப்பிரிவின் துப்பறியும் சார்ஜென்ட் அலிசியா முர்ரே (Alicia Murray) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். “மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர், தகவலறிந்த எவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.”
குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படம் எதுவுமில்லை என்று பொலிஸார் சிடிவி நியூஸிடம் (CTV News) தெரிவித்தனர்.