பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது காணொளி மாநாடு (Video conference) மூலமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் அன்னத்துரை தர்ஷினி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்:
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் T-56 ரக தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஐந்து படுகொலைகள் தொடர்பாக, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் துறை (CID) விசாரணைகளைத் தொடங்கியது. இது தொடர்பாக மாத்தளை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் 3 ஆம் எதிரியாக பிள்ளையான் பெயரிடப்பட்டுள்ளார். CID இவரை பின்வரும் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபராகப் பெயரிட்டுள்ளது:
-
கல்லடி முருகன் கோவில் சம்பவம் (2008): கல்லடி முருகன் கோவில் அருகில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை.
-
காத்தான்குடி சம்பவம் (மே 22, 2008): காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை.
-
வவுணதீவு சம்பவம் (ஆகஸ்ட் 20, 2008): வவுணதீவு, கொதியபுலையில் ஆயுதமேந்திய குழுவினால் இரவு வேளையில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை.
இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகள்:
-
கல்லடி பகுதியில் இடம்பெற்ற ஐந்து படுகொலைகள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் அது சார்ந்த மற்றொரு குற்றச்சாட்டு தொடர்பில் இன்றை விசாரணைகள் அமைந்திருந்தன.
-
இன்றைய விசாரணையின் போது சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், பிள்ளையான் சார்பில் இரு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
-
சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், பிள்ளையானை ஆகஸ்ட் 4 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
-
இதற்கிடையில், கல்லடி காணித் தகராறு தொடர்பான வழக்கு அக்டோபர் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் 1 ஆம் எதிரி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால் அவருக்கு எதிராக கைது பிடியாணை (Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.