தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று முன்தினம் (04.07.2026) வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்வரும் நாட்களில் தன்னுடைய அரசியல் நகர்வுகள் குறித்தும் அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்கு விசாரணைக்கு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,
“பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவதும் தனக்குத் தெரியாது, நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதும் தெரியாது என்றும் மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்களில் ஈடுபடும் வேலையை மாத்திரமே செய்து வருவதாகவும், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பலமான கூட்டணியாக ஒன்று சேர்ந்து அடுத்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார்.