கனடாவின் மிசிசாகா நகரில் நபரொருவர் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் துல்லியமாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 19 ஆம் திகதி நண்பகல் 12:15 மணியளவில் ‘ஹுரொன்டாரியோ வீதி’ (Hurontario Street) மற்றும் ‘ஆக்னஸ் வீதி’ (Agnes Street) சந்திப்பிற்கு அருகில் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த அவசரத் தகவல்களையடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.
புலனாய்வாளர்களின் விபரங்களின்படி, சம்பவத்திற்கு முன்னர் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடம் (Parking lot) ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்ட நபருக்கும் சந்தேகநபருக்கும் இடையே கடுமையான கைகலப்பு (Physical altercation) ஏற்பட்டுள்ளது. இப் மோதலின் போதே பாதிக்கப்பட்ட நபர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இவ் விபரீதத்தில் உயிரிழந்தவர் மிசிசாகா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சே வில்சன் (Chay Wilson) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, நிலையான முகவரி எதுவும் அற்ற (No fixed address) 28 வயதுடைய ஜெரோம் எட்வர்ட்ஸ் (Jerome Edwards) என்ற சந்தேகநபருக்கு எதிராக, இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் (Second-degree murder) கீழ் தற்போது கனடா நாடு தழுவிய அளவிலான விசேட கைது கட்டளை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான எட்வர்ட்ஸ், நடுத்தர உடல்வாகு, குறுகிய கருப்பு தலைமுடி மற்றும் கருப்பு நிற முகத்தாடி (Goatree) கொண்ட ஒரு கருப்பினத்தவர் எனப் பொலிஸார் விபரித்துள்ளனர். அவர் கடைசியாக வெள்ளை நிற டி-சர்ட், கருப்பு நிற ஜிப்-ஸ்டைல் ஜாக்கெட், ஒளிரும் பச்சை நிற (Fluorescent green) காற்சட்டை, மஞ்சள் நிற டிம்பர்லேண்ட் ரக பூட்ஸ் காலணி மற்றும் வலது கையில் கருப்பு நிற கடிகாரம் ஆகியவற்றை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் பொதுவாக ‘ஹுரொன்டாரியோ வீதி’ மற்றும் ‘டண்டாஸ் வீதி’ ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வரக்கூடியவர் எனப் புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபரான எட்வர்ட்ஸ் உடனடியாக ஒரு சட்ட ஆலோசனையைப் (Legal counsel) பெற்றுக்கொண்டு, பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடையுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இந்தச் சந்தேகநபருக்குப் புகலிடம் அளிப்பவர்களோ அல்லது அவர் தப்பியோட உதவுபவர்களோ கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு (Criminal charges) முகங்கொடுக்க நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சந்தேகநபர் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் யாரும் அவரை நேரடியாக அணுக வேண்டாம் என்றும், அவரைக் கண்டால் உடனடியாக ‘911’ என்ற அவசர இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறும் பீல் பிராந்திய பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.