இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத ரீதியான தாக்குதல்கள் பற்றிய சட்ட ஆய்வு’ எனும் தலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) வெளியிடப்பட்டது.
அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட 12 மாதகாலத்தில் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை மீறும் வகையிலான 29 சம்பவங்களும், 19 பிரிவினைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தப் பிரிவினைச் சம்பவங்களில் பெரும்பாலானவை வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யுமாறு கோரி மேற்கொள்ளப்பட்டவையாகும். அதேபோன்று அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுடன் தொடர்புடைய 15 சம்பவங்களும், 5 பொதுச்சொத்து சேத சம்பவங்களும், உடலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் 4 உம் பதிவாகியுள்ளன.
அதேவேளை இக்காலப்பகுதியில் கிறிஸ்தவர்களும் இந்துக்களுமே அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி கிறிஸ்தவர்களுக்கு எதிராக 58 தாக்குதல் சம்பவங்களும், இந்துக்களுக்கு எதிராக 22 தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று இத்தாக்குதல்கள் மற்றும் மீறல்களின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி நோக்குகையில், அவற்றில் அரச தரப்பினரின் பங்களிப்பு உயர்வாகக் காணப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பொலிஸாரின் பங்களிப்புடன் 36 மீறல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதுடன், ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களினாலும் மத சுதந்திரத்துக்கு இடையூறு விளைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சொத்துச்சேதங்கள் போன்ற சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் தனிநபர்களேயாவர்.
மேலும் மாவட்ட ரீதியாக நோக்குகையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான சம்பவங்கள் (15) பதிவாகியிருப்பதுடன், அதற்கு அடுத்ததாக கிளிநொச்சி (12) மற்றும் திருகோணமலை (11) ஆகிய மாவட்டங்களில் மத ரீதியிலான மீறல்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய மத அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையவெளியில் மத ரீதியான பதற்றங்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக எச்சரிக்கை முறைமைகளை உருவாக்கல், சமூக ஊடகங்களைக் கண்காணித்தல் மற்றும் சட்ட ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.