யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முதலாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்கள் தொடர்பில் காலாண்டுக்கு ஒரு முறை கலந்துரையாடுவது வழமையானதாகும் எனவும், அந்த வகையில் நடப்பாண்டில் முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் மக்களை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட வாழ்வாதார, உட்கட்டுமான செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட அரசாங்க அதிபர், அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது பிரதேச செயலாளர்களுடன் சரியான தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் சரியான ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை பெற்று செயற்படுவதன் மூலம் மேன்மேலும் வினைத்திறனாக செயற்பட முடியும் எனவும், இவ் வருடம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களிற்காக 760 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், இதுவரை 212 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் செயற்பட்டுவரும்அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது நிறுவனங்களின் செயற்பாடுகள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதற்கான உரிய அறிவுறுத்தல்களையும் அரசாங்க அதிபர் வழங்கினார்.
மேலும் இக் கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி அரச சார்பற்ற, நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், பிரதேச செயலாளர்கள், திட்டங்களுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள்