யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கௌரவ போராசிரியர் (கலாநிதி) அனில் ஜெயந்த பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026). மாலை 06.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு வருகை தந்த வ அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்ற அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் தேவைப்பாடுகளை முன்வைப்பின் (Presentation) ஊடாக முன்வைத்தார்.
மேலும், இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன் அவர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2027 – 2028 ஆண்டுக்களில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் முன்வைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் அமைச்சரால் ஆராயப்பட்டது. இதன் போது முதலீடு மேற்கொள்வதற்கு – முதலீட்டுச் சபை மற்றும் ஏனைய திணைக்களங்களால் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான அனுமதியினை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், 2027 மற்றும் 2028 ற்காக பாரிய திட்டங்களின் சாத்தியப்பாடான திட்டங்களை எதிர்வரும் ஆண்டுகளின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், மின்மாற்றிக்கான இயலளவு போதுமானதாக இல்லாத காரணத்தினால் சூரிய கலன் பொருத்துவதற்கான அனுமதியினை வழங்க முடியாதிருப்பதாகவும், அதற்கு இரண்டு ஆண்டுகள் எடுக்கும் எனவும், எனினும் மாற்று ஒழங்குகளுக்கான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சரால் மேலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், யாழ்ப்பாணத்தில் ஒப்புரவான அபிவிருத்திக்கு (Balanced Development) ஏற்றவகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கெளரவ அமைச்சரால் தெரிவிக்கப்பட்டதுடன், மாகாண மாவட்ட திட்ட முன்மொழிவுகளை ஒருங்கிணைந்த வகையில் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், திறைசேரியின் பணிப்பாளர் நாயகம், தேசிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், தேசிய அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர் நாயகம், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், திணைக்களங்களின் தலைவர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.