அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23.03. 2026) அதிகாலை ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின. தற்போது கிடைத்த செய்திகளின் படி இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக அதிகாரசபையின் (Port Authority) நிர்வாக இயக்குநர் கேத்ரின் கார்சியா, விமானத்தில் இருந்த 76 பேரும் (72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 41 பேர் குயின்ஸ்ஸ் பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 9 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வாகனத்தில் பயணம் செய்த இரண்டு துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மொன்றியலின் பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்ற இந்த விமானம், தரையிறங்கிய உடனேயே இந்த விபத்து இடம்பெற்றது. அந்த நேரத்தில், தீயணைப்பு வாகனம் வேறொரு அவசர உதவிக்காகச் சென்று கொண்டிருந்தது. யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) விமானம் ஒன்று புறப்படும்போது ஏற்பட்ட ஒரு விசித்திரமான மணம் (Odour) காரணமாக உதவி கோரியிருந்ததாலேயே அந்த வாகனம் அங்கு சென்றதாக கார்சியா உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஜெட் விமானம் ஓடுதளத்தில் சிவப்புக் நிற மீட்பு வாகனங்களால் சூழப்பட்டிருப்பதையும் விமானத்தின் முன்பகுதி (Nose) நசுங்கி வானத்தை நோக்கித் தூக்கியபடி உள்ளது. விமானிகள் அறை (Cockpit) முதல் பயணிகள் ஜன்னல் வரை முற்றிலும் பிளந்து, வயர்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் சிதைந்து காணப்படுகின்றதையும் அவதானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் Bombardier CRJ900 ரகத்தைச் சேர்ந்தது. இது குறுகிய மற்றும் நடுத்தர தூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட 50 முதல் 100 பேர் வரை பயணம் செய்யக்கூடிய சிறிய வகை ஜெட் விமானமாகும்.
கனேடிய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன், இது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். “விமானப் பாதுகாப்பு எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும்,” என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்றிரவு மியாமிக்கு (Miami) புறப்படுவதற்காக ஓடுதளத்தில் காத்திருந்த லியோ மெதினா (Leo Medina, 23), தனது விமான ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, ஏயர் கனடா விமானத்தின் இரண்டு விமானிகளைப் பலியெடுத்த அந்த விபத்தைக் கண்டார் என மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களாக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் சிலியைச் சேர்ந்த மெதினா கூறுகையில்:
“நாங்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து சரியாக 100 மீட்டர் தொலைவில்தான் இருந்தோம். அந்த விமானம் அப்படியே இரண்டாகப் பிளந்தது (Cut in half) போல இருந்தது என்றார்.
மெதினா பயணம் செய்யவிருந்த விமானம் விபத்து காரணமாக மீண்டும் நுழைவாயிலுக்கே (Gate) திரும்பியது. அவரும் அவரது நண்பர் தியாகோ சாவாரியாவும் (Diego Chavarría) கடந்த 12 மணிநேரமாக விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.
சிகாகோவிற்கு (Chicago) செல்லவிருந்த கேட்டி ரோஜாஸ் (Katie Rojas, 26) என்ற பயணிக்கு இது ஒரு நீண்ட மற்றும் பயங்கரமான இரவாக அமைந்துள்ளது. ஏர் கனடா விமான விபத்து நடந்த அதே நேரத்தில், இவரது விமானமும் ஓடுதளத்தில் (Runway) புறப்படத் தயாராக இருந்துள்ளது.
இது குறித்து ரோஜாஸ் விவரித்ததாவது:
நின்ற விமானம்: “விமானம் இரண்டு முறை புறப்பட முயன்றது, ஆனால் இரண்டு முறையுமே திடீரென அதன் பாதையிலேயே அப்படியே நின்றன.” “விமானத்தில் ஏதோ மணம் வருவதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் அவர்கள் எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.” (குறிப்பு: ஏற்கனவே ஒரு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் மணம் வந்ததாகக் கூறி அவசர உதவி கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது).
விமானத்திலிருந்து கீழே இறங்கி முனையத்திற்கு (Terminal) வந்தபோதுதான், அங்கு ஏராளமான அவசரக்கால மீட்பு வாகனங்கள் குவிந்திருப்பதை ரோஜாஸ் கண்டுள்ளார். பின்னர் இணையம் வாயிலாகவே விபத்து நடந்த செய்தியை அவர் அறிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.