பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் (Test Tube) ஒன்று வெடித்ததில் காயமடைந்த ஆசிரியை ஒருவரும் இரு மாணவிகளும் இன்று (23) தியத்தலாவை ஆதார வைத்தியசாலை மற்றும் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய இரு மாணவிகளும், 48 வயதுடைய ஆசிரியையுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11ஆம் தர மாணவர்களின் விஞ்ஞான பாடத்திற்கான பரிசோதனையொன்றை மேற்கொண்டிருந்த போது, அதற்காக பயன்படுத்தப்பட்ட பொட்டாசியம் பெர்மாங்கனேட் (Condy’s crystals) அடங்கிய சோதனை குழாய் வெடித்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.