திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதை போன்றதொரு எண்ணம் எம்மிடம் இல்லை. தேர்தல் இடம்பெறும் வரை காத்திருப்போம். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களினூடாக எம்மை கடுமையாக சாடியமைக்கு அரசாங்கத்துக்கு நன்றித் தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். எம்மை பிரபலமாகியுள்ளனர். இன்று இந்த நாட்டின் பாடசாலை மாணவர்கள் முதல் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற உள்ள முதலாவது பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடை பகுதியில் இடம்பெற உள்ளது என்பதை அறிந்துள்ளனர். இந்த பேரணி தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்ள அரசாங்கத்திடம் உள்ள பணத்தை போல எம்மிடம் பணமில்லை.
ஜே.வி.பி மற்றும் என்.பி.பி ஆகியன எதிர்க்கட்சியாக இருந்த போதே பிரச்சாரத்துக்கு அவர்களிடம் கோடிக்கணக்கான பணம் கையிருப்பில் இருந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும். பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பணம் எம்மிடம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில், பேரணி தொடர்பில் பிரச்சாரம் செய்த அரசாங்கத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இது ஜனாதிபதிக்கு எதிரானதோ அல்லது அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான பேரணியோ அல்ல.
அரசாங்கத்துக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன, அந்த காலப்பகுதியில் அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே நடைபவணியில் ஈடுபட உள்ளோம். அரசாங்கமளித்த வாக்குறுதிகளை மீள நினைவூட்டுவதில் உள்ள தவறு என்ன? அடக்குமுறையையும் ,ஊழலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது தவறா? அரசாங்கத்தை வழிப்படுத்தவே எதிர்பார்த்துள்ளோம், மாறாக அரசாங்கத்தை வீழ்த்துவது எமது என்னம்மல்ல.
அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது அடக்குமுறையாளர்கள், ஊழல் வாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பொய்காரர்களைக் கொண்டதாக இருக்குமாயின் அதை மக்களுக்கு தெரியப்படுத்த நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றார்.